மனைவியைக் கொன்ற கணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!

210

கேரளாவில்..

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி குழந்தைகளை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பகுதியில் பினு (40), ஷீஜா (38) ஆகியோர் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இருவருக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலையில் இந்த தம்பதிகளின் குழந்தைகள் இருவரும், அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களுடன் அழுதபடியே வீட்டிலிருந்து அருகில் உள்ள வீடுகளை நோக்கி ஓடி வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று வீட்டிற்குள் பார்த்தபோது,

அங்கு ஷீஜா, அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 11 மற்றும் 8 வயது சிறுவர்கள் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகில் உள்ள கொரட்டி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் ஆய்வு செய்தபோது அது பினு என்பது தெரிய வந்தது. இதனால், குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிவிட்டு, பினு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் எதனால் இந்த சம்பவம் நடைபெற்றது என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் இருவருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சற்று உடல்நலம் தேறிய பிறகே, இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.