அமெரிக்க இளைஞனை இந்திய முறைப்படி திருமணம் செய்த தமிழக பெண்!!

325

அமெரிக்காவில்..

அமெரிக்க இளைஞரை இந்திய முறைப்படி தமிழக பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி முத்துப்பட்டனத்தை சேர்ந்த தம்பதியினர் சிதம்பரம் மற்றும் மீனாள்.

இவர்களுடைய மகள் பிரியா அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரியாவுக்கு நியூ ஜெர்சி பகுதியில் வசிக்கும் மைக்கேல், ஏஞ்சல் தம்பதியின் மகனான மென்பொருளாளர் சாம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களுடைய நட்பு, காதலாக மாறியது.

இதனைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இதனால், பிரியா தனது வீட்டில் இதை பற்றி தெரிவித்து பெற்றோர் சம்மதத்தை பெற்றார்.

ஆனால், பிரியாவுக்கு அமெரிக்காவில் திருமணம் செய்வதை விட, இந்திய முறைப்படி சொந்த ஊரில் திருமணம் செய்ய வேண்டும் ஆசை இருந்ததால் அதனை சாமிடம் தெரிவித்தார். அதற்கு, அவரும் சம்மதம் தெரிவித்து தனது பெற்றோருடன் அமெரிக்காவில் இருந்து சிவகங்கைக்கு வந்தனர்.

அங்கு, சில நாட்களாக திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை காரைக்குடியில் செட்டிநாட்டு நகரத்தார் பாரம்பரிய முறைப்படி மாக்கோலம், மாவிலை தோரணம், அரசனிக்கால் மணவறை, நாதஸ்வர இசையுடன் கெட்டிமேளம் முழங்க இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது சாமின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ் பாரம்பரிய உடையில் வந்து உற்சாகத்துடன் மணமக்களை வாழ்த்தினர்.