5 மாத கர்ப்பிணி மனைவியை பேருந்தில் இருந்து எட்டி உதைத்து கொலை செய்த கணவன்!!

185

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் வசித்து வருபவர் வெள்ளைமெய்யன். இவருடைய மகன் 24 வயது பாண்டியன். இவர் நத்தம் கல்வேலிபட்டி பாலமுருகன் மகள் 19 வயது வளர்மதியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாண்டியன் கடும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

பேருந்தில் பேசிக்கொண்டே வந்த தம்பதியரிடையே சற்று நேரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து அப்போது கணவாய்பட்டி ஒத்தக்கடைக்கு அருகே சென்று கொண்டிருந்தது அப்போது, பின் பக்க படிக்கட்டில் அமர்ந்திருந்த பாண்டியன் அவரது மனைவியைக் காலால் எட்டி உதைத்துவிட்டார். வளர்மதி நிலை தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து வளர்மதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து பேருந்தின் முன்பகுதிக்குச் சென்று ஓட்டுனரிடம் “எனது மனைவியை நான் கீழே தள்ளிவிட்டேன், பேருந்தை நிறுத்துங்கள்” எனக் கூறிய பிறகு தான் ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் விஷயம் புரிந்தது. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வளர்மதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கணவனே பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.