திருமணமாகி நான்கு மாதம்… மனைவி, காதலனை வெட்டிக் கொன்ற முன்னாள் கணவன்!!

572

திருமணமாகி நான்கே மாதங்களில், தன்னுடன் சேர்ந்து வாழாமல் பிரிந்து சென்ற மனைவியையும், அவரது காதலனையும் முன்னாள் கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாவட்டம், பெல்காம் மாவட்டத்தில் கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தௌபிக் காடி(24). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஹீனகௌசர் சுதரனே(19) எனும் இளம்பெண்ணுடன் தெளபிக் காடிக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் தனது காதலன் யாசினுடன்(21) வீட்டை விட்டு வெளியே கணவரை பிரிந்து சென்றார் ஹீனகௌசர்.

இதுதொடர்பாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கிராம பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. அப்போது தனது கணவருடன் வாழமாட்டேன் என்றும், காதலனுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று ஹீனகௌசர் சுதரனே திட்டவட்டமாக சொன்னார்.

இதனால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில், யாசினை ஹீனாகௌசருக்கு ஊர் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தனர். இதனால், தனது மனைவி மற்றும் அவரது காதலன் மீது தௌபிக் ஆத்திரத்தில் இருந்தார்.

நேற்று இரவு யாசின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற தௌபிக், தன் முன்னாள் மனைவி ஹீனகௌசரை சரமாரியாக வெட்டி விட்டு, அவரது காதலன் யாசினையும் வெட்டினார். அவர்களைக் காப்பாற்ற வந்த அமினாபாய் பகுடா, மாமனார் முஸ்தபா முல்லா ஆகியோரையும் தௌபிக் அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடி விட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து பார்த்த போது, யாசின், ஹீனாகௌசர் ஆகியோர உயிரிழந்து கிடந்தனர். படுகாயங்களுடன் இருந்த அமினாபாய், முஸ்தபா ஆகியோரை மீட்டு மிராஜில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தௌபிக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.