சாப்பாடு செய்யாததால் ஆத்திரம்.. பெற்ற தாயை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த சிறுவன்!!

665

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம், முல்பாகலையில் வசித்து வருபவர் நேத்ரா.. 40வயதாகும் இவர் தற்போது பெங்களூரு கே.ஆர்.புரம் பீமய்யா லே – அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் . இதில் மகனுக்கு 17 வயது.

இவர் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, நேத்ராவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .இதனால் கோபத்தில் மகன், சாப்பிடாமலேயே தூங்கிவிட்டார். காலை 7:30 மணிக்கு காலேஜ் செல்வதற்காக பரபரப்பாக கிளம்பினார்.

நேத்ரா அயர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்தார். எழுந்திருக்கவே இல்லை. அதனால் வீட்டில் டிபன் தயாராகவும் இல்லை. தான் காலேஜ் போவது தெரிந்தும்கூட, டிபன்கூட செய்யாமல் இன்னமும் அம்மா தூங்கி கொண்டிருந்ததை பார்த்ததும் மகனுக்கு கோபம் வந்துள்ளது.

இதனையடுத்து நேத்ராவை எழுப்பி டிபன் கேட்டார். ஆத்திரமடைந்த நேத்ரா, மகனை சத்தம் போடவும், மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் நேத்ரா நீ என் மகன் இல்லை. ஏன் உனக்காக சமைக்கணும் என கூறிவிட்டார்.

ஆவேசமடைந்த மகன், வீட்டிற்குள்ளிருந்து இரும்பு கம்பியை எடுத்து வந்து, நேத்ராவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் நேத்ரா சுருண்டு விழுந்தார்.

துடிதுடித்து சம்பவ இடத்திலேயே மகன் கண் முன்னாலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன், நேராக கே.ஆர்.புரம் போலீசில் சரண் அடைந்துவிட்டார்.

இச்சம்பவம் நடந்தபோது, வீட்டில் இவர்கள் 2 பேரை தவிர வேறு யாருமில்லை. போலீசார் நேத்ராவின் சடலத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து, தாயை கொன்ற மகனிடம் விசாரணை நடத்தினர்.

இதில் மகன் அம்மா தன்னை சரியாக கவனிக்கவில்லை, முறையாக சாப்பாடும் தருவதில்லை. காலேஜூக்கு கிளம்பும்போது தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் இரும்புகம்பியால் பலமாக தாக்கிவிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.

நேத்ராவுக்கு இன்னொரு மகள் ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். கடந்த 30 வருடங்களாக கே.ஆர்.புரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் நேத்ரா. காலை 7.30 மணிக்கு தொடங்கிய தகராறு அரை மணி நேரத்திலேயே கொலையாக முடிந்து விட்டது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.