காதல் மனைவியை உயிரோடு தீயிட்டு கொளுத்திய கணவன்!!

432

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பார்வதியாபுரம் கிராமத்தில் பார்த்திபன் என்பவரும், குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

பார்த்திபன் குடியாத்தம் பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். தனலட்சுமி குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் பிரபல நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். தனலட்சுமியின் சித்தப்பா மகளான தங்கை இறந்து இன்று காரியம் நடைபெற்றது.

இதில் பார்த்திபன் காரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று மனைவி தனலட்சுமிக்கும், பார்த்திபனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே திடீரென வீட்டில் இருந்து தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது தனலட்சுமி தீக்காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் தனலட்சுமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தனலட்சுமியின் பெற்றோருக்கு பார்த்திபன் போன் செய்து தங்கள் மகள் தீயிட்டு கொளுத்திக் கொண்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளதாகவும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு வந்த தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த பெற்றோர்களும், உறவினர்களும் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனே மனைவியை தீயிட்டுக் கொளுத்தி இருக்கலாம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தீயிட்டு கொளுத்தினாரா அல்லது மனைவியே தீயிட்டு கொளுத்திக் கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு மனைவி பலத்த தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.