மனைவியுடன் தகராறு : 14 மாத பெண்குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!!

383

தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் கிம்யாதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது திருப்பதி. இவரது மனைவி 28 வயது சிவலி. இவர்களின் பெண்குழந்தை சசிகலா பிறந்து 14 மாதங்கள் ஆகிறது.

திருப்பதிக்கு திருமணமான சில மாதங்களில் இருந்தே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அடுத்தடுத்த தகராறு காரணமாக சிவலி தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனையடுத்து சிவலி கணவனை விட்டு பிரிந்து ஐதராபாத்தில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். இந்நிலையில் பிப்ரவரி 4ம் தேதி இரவு திருப்பதி மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி சிவலியிடம் குடும்பம் நடத்த வரும்படி அழைப்பு விடுத்தார்.

சிவலி, சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்யும் உன்னுடன் வரமாட்டேன் எனக் கூறிவிட்டார். ஆத்திரத்தில் திருப்பதி குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திற்கு புறப்பட்டார்.

ஆட்டோவில் வரும்போது மனைவியிடம் செல்போனில் பேச முயற்சித்தார். ஆனால் சிவலி போனை எடுக்கவே இல்லை எனத் தெரிகிறது. இதனால் திருப்பதி, பிஜினப்பள்ளி புறநகர் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது ஆட்டோவிலேயே குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையறிந்த ஆட்டோ ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் திருப்பதி ஆட்டோவை காவல்நிலையத்துக்கு விடும்படிகூறினார். அதன்படி ஆட்டோவில் சென்று குழந்தையின் உயிரிழந்த சடலத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.