
கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. சம்ப்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் (12.02.2024) மீட்கப்பட்ட இந்த சடலம், மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 59 வயதான கதிரவேல் பத்மராஜ் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக தெரிவித்து வெளியே சென்றதாகவும் சடலமாக மீட்கப்படும் வரை அவரை தேடியும் கிடைக்காததினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, கல்முனை பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது என்பதை அறிந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சென்று அங்கே பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் தனது கணவர் தான் என்பதனை உறுதிப்படுத்தியதாகவும் மரணமடைந்தவரின் மனைவி தெரிவித்தார்.
இந்த நிலையில் உயிரிழந்த குடும்பஸதரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.




