பிரசவ நாளில் தேர்வு… நீதிபதியாக சாதனை படத்தை பழங்குடியின இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!!

470

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாகும் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி என்ற பெண். மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் பிரிவை சேர்ந்த இவர், ஏலகிரி மலையில் கல்வி கற்றார்.

இதைத்தொடர்ந்து B.A.,B.L., சட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. எனினும் படிப்பை கைவிடாத இவர், தனது குடும்பத்தினர் உறுதுணையால் சட்டப்படிப்பை முடித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு பயின்று வந்த இவர், அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கும் வகையில், தேர்வு தேதியின்போது, இவருக்கு பிரசவ தேதியும் குறிக்கப்பட்டிருந்தது.

இதனால் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றுக்கொண்ட இவர், ஒரு பக்கம் குழந்தை மறுபக்கம் புத்தகம் என இருந்து தேர்வுக்கு முழுமையாக தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். பிரசவித்து 2 நாட்களில் தேர்வு. இதற்காக மருத்துவர்கள் ஆலோசனைப்படி தேர்வு எழுத புறப்பட்டார்.

சுமார் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வெழுத சென்னை சென்றார். அங்கே வெற்றிகரமாக தேர்வு எழுதினார். இந்த நிலையில் தற்போது அந்த தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக சாதித்து காட்டியுள்ளார்.

பழங்குடியினர் பிரிவை சேர்ந்த வெறும் 23 வயதே ஆன இளம்பெண், குழந்தை பிறந்து 2 நாட்களில் பல கி.மீ பயணித்து தேர்வுக்கு சென்ற நிலையில், அவரது முழு முயற்சிக்கும் பலன் கிட்டியது போல் இன்று சாதித்துள்ளார். தற்போது ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.