வங்கி கொடுத்த கடன் தொல்லையால் இளம் தம்பதி உயிரிழந்த பரிதாபம்!!

754

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கீசரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (45). இவரது மனைவி பாக்யா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டுத் தேவைக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி கடன் பெற்று வந்தனர்.

ஆனால் உரிய நேரத்தில் பணம் செலுத்த முடியவில்லை. இதனால், வங்கிக் கடனை வசூலிக்கும் முகவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து, கிரெடிட் கார்டு பில்களை செலுத்தும்படி தம்பதியினரை சித்ரவதை செய்துள்ளனர்.

அவமானப்படுத்தப்படுத்தியுள்ளனர். இதனால் சுரேஷ் மற்றும் பாக்யா மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. அவமானம் தாங்க முடியாமல் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பாக்யாவின் தாய் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்து சென்று விட்டு வந்துள்ளனர். நேற்று வீட்டில் தனியாக இருந்த கணவன், மனைவி இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

முன்னதாக, தங்கள் இறப்புக்கு வங்கி கிரெடிட் கார்டு அதிகாரிகளை குற்றம் சாட்டி கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீசர போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு,

பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் எழுதிய கடிதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.