வவுனியாவில் சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த பொலிஸார் – சாரதியை கைது செய்ய முயற்சி

3772

வவுனியாவில் சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை…

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (03.03.2024) காலை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலமை நிலவியது.

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் (28) அதிகாலை அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

சாந்தனின் புகழுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டமையுடன் பிரேச பரிசோதனை முடிவின் பின்னர் இன்று (03.03.2024) காலை வவுனியாவிற்கு சாந்தனின் புகழுடல் எடுத்து வரப்பட்டது

சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினுள் உள்நுழைந்த சமயத்தில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையுடன் ஊர்தி அருகே சென்ற வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொருப்பதிகாரி ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் எனவும் ஊர்தி சாரதியினை வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவித்தமையினால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியது.

அதன் பின்னர் ஏற்பாட்டு குழுவினர் பழைய பேரூந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர்.