வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா இடம்பெறும்

830

வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில்….

வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக இடம்பெறும் என்று ஆலயத்தின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ஆலயம் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வவுனியா நீதிமன்றிற்கு இன்றையதினம் சமூகம் அளித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குருந்தூர் மலை விகாராதிபதி எமது ஆலயத்தினை இலக்காக வைத்து சில கடும்போக்குவாதிகளை அழைத்துக்கொண்டு அண்மையில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் எதிர்வரும் சிவராத்திரி தினத்தன்று மக்களை அணிதிரட்டி அதனை குழப்பும் விதமான கருத்துக்களை முகநூலில் பகிர்ந்துள்ளார்.இவ்வாறு அவர் நடந்து கொள்கின்றமை மிகவும் வருத்தம் அளிக்கின்றது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமானது தொன்று தொட்டு எமது மக்களால் வழிபடப்பட்டுவந்த ஒரு ஆலயம். பௌத்த கடும்போக்குவாதிகளின் தூண்டுதலின் பெயரிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிகின்றது.

இருப்பினும் எதிர்வரும் மகாசிவராத்திவிழா மிகவும் சிறப்புற இடம்பெறும் என அனைத்து மக்களிற்கும் தெரியப்படுத்துகின்றோம் என்றார்.