வவுனியாவில் பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் விபரங்கள்!!

326

Landவவுனியாவில் பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் விபரங்களை வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சா. கர்ணன் பட்டியலிட்டுள்ளார்.

வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது வவுனியா பிரதேசத்தில் இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் விபரம் கோரப்பட்டபோதே அவர் பட்டியிலை வெளியிட்டார்.

தொடர்ந்தும் பட்டியிலை சமர்ப்பித்த உதவிப் பிரதேச செயலாளர், காணி முறைப்பாடுகள் தொடர்பில் 30 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை காணி சுவீகரிப்பு உத்தியோகத்தருக்கு தாம் மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இதுவரை வவுனியா மாவட்டத்தில் பல தனியார் மற்றும் அரச காணிகள் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தவகையில் வவுனியா நகரில் பொலிஸ் நிலையத்திற்காக 0.25 ஏக்கர் நிலமும் பூங்கா வீதியில் நெல் சந்தைப்படுத்தும் சபைக்குரிய இடத்தில் விசேட அதிரடிப்படைக்காக 1.5 ஏக்கர் நிலமும் பட்டானிச்சூர் புளியங்குளத்தில் தனியார் காணி 2 ஏக்கர் இராணுவத் தேவைக்காவும் மூன்று முறிப்பு கிராம சேவகர் பிரிவில் இராணுவ நலன்புரி நிலையத்திற்காக 0.25 ஏக்கர் நிலமும் இராணுவ மற்றும் விமானப்படையின் தலைமைப்பீடத்திற்காக 240 ஏக்கரும் மேலுமொரு படைப்பரிவுக்காக 38 ஏக்கர் காணியுமாக தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்காக 28 ஏக்கர் நிலமும் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணியில் சிலருக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. சிலர் அதனை பெறவில்லை எனவும் உதவி பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வவுனியா நகர் வடக்கு கிராம சேவகர் பிரிவில் கலாசார மண்டபம் இராணுவத்தினரால் ஆட்சிப்படுத்தப்பட்டள்ளது.

இதன் நிலப்பரப்பு 0.5 ஏக்கர் ஆகும். இத்துடன் பேயாடிகூழாங்குளத்தில் 56 ஆவது படையணிக்காக சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு 20.5 ஏக்கராகும். மகாறம்பைக்குளம் கிராம சேவகர் பிரிவில் பொலிஸ் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு 6 ஏக்கராகும். காத்தார் சின்னக்குளம் கிராமத்தில் விஜயபாகு ரெஜிமென்டுக்காக 4 ஏக்கர் காணியும் சுவீகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இவற்றை செவிமடுத்த அபிவிருத்தி குழுவின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவட்ட மட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு உத்திரவிட்டிருந்தார்.