யாழில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

1565

யாழில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

காரைநகர் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று வீடு திரும்பி கொண்டிருந்த கணவன், மனைவி பொன்னாலை பாலத்துக்கு அருகில் இரு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

கடத்திச் சென்றவர்கள் கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக விட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் படுகாயங்களுடன் விட்டுச் செல்லப்பட்ட கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்றைய தினம் (12.03.2024) யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் உடலில் வெட்டுக்காயங்கள், கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்கள் காணப்பட்டுள்ளதுடன், மூச்சுக் குழாய்க்குள் இரத்தம் சென்றதால் மரணம் நேர்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.