17 வயதுச் சிறுமி கொலை : பிரதான சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம்!!

899

காலி எல்பிட்டிய பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் உயிரிழந்தவரின் மைத்துனரான சுதேஷ் பிரியங்கர என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கொலை செய்யப்பட்ட சிறுமி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தமையினால் கொலை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், சந்தேக நபரை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எல்பிட்டிய தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 17 வயது சிறுமியின் சடலம் கடந்த 9 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது.

கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதிஷானி, என்ற சிறுமியே அவரது மைத்துனரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவரது சகோதரி எல்பிட்டிய மண்ணகந்த பகுதியில் வசித்து வந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஹன்சிகாவை அந்த வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அந்த நேரத்தில், அவர் தனது சகோதரியின் கணவருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்துள்ளார். கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி வீட்டுக்கு வந்த மருமகன், தனது இளைய மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக ஹன்சிகாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

பிறகு ஹன்சிகா வீட்டிற்கு வந்த நிலையில், மீண்டும் மறுநாள் வந்து ஹன்சிகாவை மைத்துனர் அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையில், ஹன்சிகா தொலைபேசி ஊடாக அழைத்து, வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தன்னைக் காப்பாற்றுமாறு தனது தாயிடம் கூறியுள்ளார்.

முறைப்பாட்டை விசாரிப்பதற்காக பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய ஹன்சிகா தனது தாய் மற்றும் சகோதரியுடன் முச்சக்கரவண்டியில் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ​​மேலும் இருவருடன் வந்த அவரது மைத்துனர் அவரை முச்சக்கரவண்டியில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி, மற்றொரு முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.