சாக தைரியமில்லை, வாழவும் விருப்பம் இல்லை : 5 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

2304

64 லட்ச ரூபாய் கேட்டு கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதிய 5 பக்க கடிதம் தற்போது கிடைத்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கே.ஆர் பேட்டை தாலுகா லிங்கபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமகுமாரி(26). இவருக்கும் மைசூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அப்போது பிரேமகுமாரியின் குடும்பத்தினர் 150 கிராம் தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், திருமணமான மூன்றே மாதங்களில் வரதட்சணை கேட்டு பிரேமகுமாரியை அவரது கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ரூ.64 லட்சம் தராவிட்டால், வீட்டில் இடமில்லை என பிரேமகுமாரியை அவரது வீட்டுக்குத் துரத்தியுள்ளனர். வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை கொண்ட பிரேகுமாரி, தனது வீட்டில் இருந்த அதற்காக படிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில், வரதட்சணை வாங்கி வராததால் கணவர் வீட்டில் இருந்து பிரேமகுமாரிக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரேமகுமாரி வீட்டில் தூக்குப்போட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பிரேமகுமாரி எழுதிய 5 பக்க கடிதம் போலீஸாரிடம் தற்போது கிடைத்துள்ளது. அதில், வழக்கறிஞராக வேண்டும் என்ற எனது கனவு நனவாகியுள்ளது. ஆனால், என் கணவருடைய கோபத்தை என்னால் தாங்க முடியவில்லை.

எந்நேரமும் பயத்துடனே வாழ்க்கையை நடத்துவது போல் இருக்கிறது. நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றி விட்டனர். பணக்கார வீட்டு பெண்ணான எனக்கு சாக தைரியம் இல்லை, ஆனால், வாழவும் ஆசை இல்லை என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து பிரேமகுமாரி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ராகவேந்திரா குடும்பத்தினர் மீது கிக்கேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.