பாரிய அளவில் அதிகரிக்கவுள்ள தேங்காய் விலை!!

953

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காய் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்கின்ற தேங்காயில் ஒரு பங்கு மாத்திரமே தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இனி வரும் மாதங்களில் முற்றாக தேங்காய் இல்லாத நிலை காணப்படும் எனவும் தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் கிளிநொச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளை ஈ தாக்கம் என தெரிவித்துள்ளனர். இதனால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளர்கள் மற்றும் தென்னை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெண் ஈ தாக்கம் காரணமாக பலரது தோட்டங்களிலுள்ள வெண் ஈ தாக்கப்பட்ட மரங்களில் சிறு குரும்பைகூட இல்லாமல் வெறுமனே நோய் தாக்கம் ஏற்படுத்தப்பட்ட மரமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தென்னை பயிர் செய்கையாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.