வியக்க வைக்கும் திறமையால் உலக சாதனையை நிகழ்த்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர்!!

445

யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்பவரெ இந்த சாதனையை படைத்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் இன்றையதினம் (24-03-2024) காலை 10.00 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்தது.

இதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய ஏஷ் பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரத்துக்கு தாடியாலும், 500 மீற்றர் தூரம் வரை தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் சாதனை படைத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனை புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் இந்த சாதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இதன்போது வாகனத்தை இழுத்துவந்த செல்லையா திருச்செல்வத்தை ஆரம்பம் முதல் சாதனையை நிலைநாட்டும் வரையில் அமைச்சர் உற்சாகப்படுத்தி வந்தார்.

இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வத்தின் சாதனையை அங்கீகரித்து, பதக்கத்தையும் விருதையும் பட்டயத்தையும் அமைச்சரின் கரங்களால் வழங்கி வைத்தனர்.

செல்லையா திருச்செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக தனது தலைமுடியாலும், தாடியாலும் வாகனங்களை இழுப்பது, தனது உடலின் மீது வாகனத்தை ஓடவிடுவது போன்ற சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்.

60 வயதான சாதனை நாயகன் அண்மையில் சாவகச்சேரி பஸ் நிலையத்தின் அருகில் 1550 கிலோ எடையுள்ள வாகனத்தை 1500 மீற்றர் தூரம் வரை 45 நிமிடங்களில் இழுத்து சாதனை படைத்துள்ளார்.