மாதவிடாய் கோளாறு : பரிதாபமாக பலியான பல்கலைக்கழக மாணவி!!

2325

களனிப் பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவி ஒருவர் மாதவிடாயால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு தாமதமாக சிகிற்சை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதாந்த மாதவிடாய் சுழற்சி தினங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியைக் கவனிக்காமல், முறையான வைத்திய சிகிச்சையைப் பெறாத காரணத்தினால் உயிரிழக்க நேரிட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சம்பவத்தில் பதுளை , மஹியங்கனை, திபுலபலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் லக்மினி இனோகா திஸாநாயக்க என்ற 25 வயதுடைய யுவதியே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் அகால மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி கடந்த 2019 இல் களனி பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் மாணவி கடந்த இரண்டு வருடங்களாக மாதாந்திர மாதவிலக்கு நாளன்று வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அந்த வலியை சகஜம் போல் தாங்கி கல்வி கற்று வந்துள்ளார்.

அதேவேளை இறுதியாண்டு மாணவி லக்மினியின் பட்டமளிப்பு விழாவும் இம்மாதம் 25ம் திகதிதான். தனது பட்டப்படிப்பு சான்றிதழுக்காக கடந்த 19ம் திகதி போட்டோ எடுத்திருந்தார்.

அன்றையதினம் மாதவிடாய் வயிற்றுவலி தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததால், சிகிச்சை பெறுவதற்காக நெருங்கிய தோழி ஒருவருடன் கிரிபத்கொட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியிருந்ததால் ராகம வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி லக்மினியின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை ராகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கடந்த 22ம் திகதி மாலை 6.58 மணியளவில் லக்மினி உயிரிழந்தார். உயிரிழந்த லக்மினி அவரது குடும்பத்தில் உள்ள ஒரே பெண் குழந்தை என கூறப்படுகின்றது.

உயிரிழந்த லக்மினியின் பிரேத பரிசோதனை ராகம வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் ரமேஷ் அழகியவண்ணவினால் மேற்கொள்ளப்பட்டு திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் ராகம வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ். எஸ். திஸாநாயக்க பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். லக்மினியின் இறுதிக் கிரியைகள் நேற்று (25) மாலை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

மாணவியின் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக வலி கொடுத்தும், குறிப்பிட்ட நோயை அலட்சியப்படுத்தியதே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணம்.

மேலும் இதுபோன்ற அகால மரணங்கள் நமது பெற்றோர், பெரியவர்கள், சமுதாயத்திற்கு பெரும் பாடம் என்றும், உங்கள் குழந்தை ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், தாமதிக்காமல் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அரிவுறுத்தியுள்ளனர்.