உறங்கிக்கொண்டிருக்கும் போது வெடித்துச் சிதறிய ஏசி.. 4 பேர் பரிதாப பலி!!

882

குஜராத் மாநிலம் துவாரகாவில் இன்று காலை ஆதித்யா சாலையில் அமைந்துள்ள வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

அதிகாலையில் வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது திடீரென ஏசி யூனிட் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 8 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

39 வயதான பவன் உபாத்யாய், அவரது 29 வயது மனைவி திதி, அவர்களது 8 மாத மகள் தயானா மற்றும் பவனின் 69 வயது தாய் பவானி ஆகியோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி அதிகாலை 3 மணியளவில் ஏசி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்ததாகவும், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் புகையில் சிக்கி மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வழியாக சென்ற சிலர் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து தீயை அணைத்தபோது, வீட்டின் மாடியில் உள்ள படுக்கையறையில் 4 சடலங்கள் கிடந்தன.

இந்த விபத்தில் அதே வீட்டின் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த பவனின் 90 வயது மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மூதாட்டி வயது முதிர்வு காரணமாக மேலே ஏற முடியாமல் தரைத்தளத்தில் தூங்குவது வழக்கம்.

இதனால், மாடியில் ஏசி வெடித்ததில் இருந்தும், புகை மூட்டத்தால் உயிரிழப்பிலும் உயிர் தப்பினார். ஆனால், குழந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் இறந்த நிலையில் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.