’என்னை ஏமாத்திட்டாங்க’.. மனைவி மீது பாகிஸ்தான் கணவர் பரபரப்புப் புகார்!!

200

சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவர் குலாம் ஹைதர், இந்தியாவில் உள்ள நொய்டா நீதிமன்றத்தில் சீமா மற்றும் அவரது இந்திய கணவர் சச்சின் மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் நடந்து வரும் விசாரணையும், விவாதங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தானின் சீமா ஹைதர்-இந்தியாவின் சச்சின் மீனா காதல் திருமணத்தில் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இணையத்தில் இருவரும் சந்தித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பின்னர் நேபாளத்தில் திருமணம் செய்து கொண்டனர். சச்சின் உடன் வாழ பாகிஸ்தானின் சீமா ஹைதர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.

இப்போது சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவர் குலாம் ஹைதர், நொய்டா நீதிமன்றத்தில் அவரது மனைவி சீமா மற்றும் அவரது இந்தியக் கணவருக்கு எதிராக ‘திட்டமிட்டு என்னை ஏமாற்றிவிட்டார்கள்’ எனக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

குலாம் ஹைதரின் இந்திய வழக்கறிஞர் மோமின் மாலிக், குற்றவியல் சட்டத்தின் 156(3) பிரிவின் கீழ் சீமா-சச்சின் தம்பதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

அவரிடமிருந்து முறையாக விவாகரத்து பெறாமல் மனைவி சீமா இந்தியாவில் திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் அவரது புதிய திருமணம் செல்லாது என்றும் நொய்டா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையின் போது, சச்சினை திருமணம் செய்து கொண்டதாக சீமா பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் சீமா சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டபோது,

அதற்கான ஜாமீன் மனுவில், குலாம் ஹைதரை தனது கணவர் என சீமா அடையாளம் காட்டி, குலாம் ஹைதரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முக்கிய வாதத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நொய்டா காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சீமா-சச்சின் ஜோடியை நொய்டா போலீசார் கடந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி கைது செய்தனர். அவர்கள் வெளிநாட்டினர் தொடர்பான ஐபிசியின் 14வது பிரிவின் கீழும், குற்றவியல் சதி தொடர்பான ஐபிசியின் 120பி பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஜூலை 7ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சச்சினின் தந்தையும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது இந்து மதத்தை தழுவி வரும் சீமா ஹைதர் பாகிஸ்தானுக்கு திரும்ப மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் சீமா தனது முந்தைய திருமணத்தில் பிறந்த 4 குழந்தைகளும் இந்து மதத்திற்கு மாறியதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், சீமா ஹைதர் இந்திய குடியுரிமை கோரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.