குழந்தை இல்லாத காரணத்தால் தினமும் சண்டை.. மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

307

குழந்தை இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண்ணின் கணவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் (28). இவரது மனைவி சந்தியா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு இன்னும் குழந்தைகள் இல்லை.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சீனுவாசன் மற்றும் அவரது பெற்றோர் நடராஜன் மற்றும் எல்லம்மாள் ஆகியோர் குழந்தை இல்லாத காரணத்தை கூறி சந்தியாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். இது தொடர்பாக போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தியா ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சந்தியாவின் தாய் வெங்கடேஸ்வரி, போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது குறித்து விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின், கடந்த 24ம் தேதி, உடல் ஓகூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சந்தியாவின் உறவினர்கள், இது தற்கொலை இல்லை .

சந்தியாவை அவரது கணவர் சீனுவாசன் வரதட்சனால் கொடூரமாக தாக்கி அதன் உச்சக்கட்டத்தில் மனைவியை தீ வைத்து எரித்து கொன்றார். அவரை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என முருகபாடி கூட்ரோடு சாலையில் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போளூர் டிஎஸ்பி சி.நல்லு, இந்த வழக்கு தொடர்பாக கோட்டாட்சியரிடம் விசாரணை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவரது அறிக்கை கிடைத்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து கோட்டாட்சியரின் விசாரணையின் அடிப்படையில் போளூர் போலீசார் நேற்று சீனுவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், சந்தியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எரித்து கொலை செய்யப்பட்டரா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.