விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!!

674

கடன் தொல்லை காரணமாக உணவக உரிமையாளர் தனது மனைவியுடன் நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் மருத்துவம் முடித்துவிட்டு தனது கணவருடன் கனடாவில் வசித்து வருகின்றனர்.

மனோகரன் மற்றும் சுமதி தங்களது இளைய மகளுடன் விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் சவுரிபாளையம் மற்றும் சேரன்மாநகர் பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மனோகரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் இவருக்கு கடன் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தம்பதியினர் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் உணவகத்திற்கு சென்ற மனோகரன், மதியம் வீடு திரும்பி உள்ளார்.

பின்னர் மாலையில் சேலம் செல்வதாக கூறிவிட்டு மனோகரனும் சுமதியும் காரில் சென்றுள்ளனர். அப்போது கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, காரை இணைப்பு சாலையில் நிறுத்தி விட்டு தாங்கள் வாங்கி வந்த விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்டுள்ளனர்.

இதனால் சிறிது நேரத்தில் சுமதி உயிரிழந்த நிலையில், மனோகரன் உயிருக்குப் போராடியுள்ளார். நெடுஞ்சாலை ஓரம் கார் நிற்பதைக் கண்டு சந்தேகமடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்துவிட்டு சுங்கச்சாவடியில் இருந்த மருத்துவ பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அங்கு சென்ற மருத்துவக் குழுவினர், இருவரையும் பரிசோதித்ததில் சுமதி ஏற்கெனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த மனோகரனை மீட்டு நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகவேலு தலைமையிலான போலீஸார் அங்கு வந்து சுமதியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மனோகரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கடன் பிரச்சினை மற்றும் உடல் நலப் பிரச்சினையால் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தது தெரியவந்தது.

மேலும் இந்த பிரச்சினைகளால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.