பணி முடிந்து கணவருடன் வீடு திரும்பிய தாதிக்கு நேர்ந்த சோகம்!!

723

கொழும்பு – பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணி முடிந்து கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த களுபோவில போதனா வைத்தியசாலையின் தாதி மீதே லொறி மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிலியந்தலை, ஜாலியகொட விஜய மாவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த தினுஷா கிரிஷாந்தி லியனகே என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்தில் அவரது கணவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தாதியின் கணவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தொழில்நுட்ப முகாமையாளராகக் கடமையாற்றுகின்றார் என்றும், பணியை முடித்துக் கொண்டு களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அருகில் சென்று மனைவியையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவர் சென்றிருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அநுராதபுரம் – கெபிதிகொல்லேவ – கொல்பெந்த குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 58 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் இன்று கூறியுள்ளனர்.