நடுக்கடலில் தங்கக்கட்டிகளை வீசி எறிந்த கடத்தல்காரர்கள்… 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்பு!!

453

ரோந்து போலீசாரைப் பார்த்ததும், கடத்தல்காரர்கள், நடுக்கடலில் தங்கக்கட்டிகளை தூக்கி வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரோந்து போலீசார், தங்கக்கட்டிகளை கடலில் தேடி, 6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளைக் மீட்டெடுத்துள்ளார்கள்.

இலங்கையில் இருந்து படகு மூலம் தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்கத்துறை உதவியுடன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து சென்றனர்.

இந்த ரோந்து படகை பார்த்த கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளுடன் வேகமாக தப்பியோட முயன்றனர். இதை பார்த்த அதிகாரிகள் அவர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை கடலில் வீசியுள்ளனர்.

பின்னர் படகில் ஏறிய அதிகாரிகள், அதில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் ரோந்து படகை பார்த்ததும் கடலில் வீசியதாக வாக்குமூலம் கொடுத்தனர்.

எனவே நேற்று காலை முதல் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் வேதாளை-மண்டபம் இடையே முயல் தீவு அருகே கடல் பகுதியில் கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக இந்திய கடலோர காவல்படையின் எஸ்.பி.ஏ. டைவிங் மற்றும் நீச்சல் பயிற்சி பெற்ற பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் பார்சலை கைப்பற்றப்பட்டது.

இதில் சுமார் 6 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் ராமநாதபுரம் சுங்கச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மொத்தம் 6 கிலோ தங்கக் கட்டிகளா? அல்லது வேறு தங்கப் பொட்டலங்கள் இன்னும் கடலில் கிடக்கின்றனவா? வேறு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை கடத்தி வந்து அதிகாரிகளின் பார்வையில் கடலில் வீசுவது போன்ற சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.