கர்நாடகாவில் வசித்து வரும் 28 வயது கூலித்தொழிலாளி அப்பண்ணா. அதே பகுதியில் வசித்து வரும் லலிதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இருவரும் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். தங்களின் காதல் குறித்த பயத்தில் வீட்டில் சொல்லவே இல்லை. இந்நிலையில் லலிதாவுக்கு, ஏப்ரல் 4ம் தேதி அவரது பெற்றோர் வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு பிறகும் லலிதாவும், அப்பண்ணாவும் வழக்கம் போல் பேசி வந்தனர். தங்களால் ஒன்று சேர முடியவில்லையே என மனவருத்தத்தில் இருந்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தாலியைக் கழற்றி வைத்துவிட்டு, கணவர் வீட்டில் இருந்து லலிதா வெளியேறினார். காதலனிடம் ‘உன்னை பிரிந்து என்னால் வாழ முடியவில்லை. நாம் இருவரும் திருமணம் செய்தாலும், பெற்றோர் வாழ விட மாட்டார்கள்’ என அப்பண்ணாவிடம் லலிதா கூறியுள்ளார். ‘ஒன்றாக வாழ முடியவில்லை என்றாலும், ஒன்றாக சாவோம்’ என இருவரும் முடிவு செய்தனர்.
வீட்டிற்கு சென்ற அப்பண்ணா, இரண்டு கயிறை எடுத்து வந்தார். இந்நிலையில் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் லலிதாவும், அப்பண்ணாவும் கிராமத்தை விட்டே வெளியேறினர்.
கிராமத்தின் வெளிப்பகுதியில் இருந்த ஒரு மரத்தில் ஒரே கயிற்றால் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். அந்த வழியாக சென்றவர்கள் அப்பண்ணாவும், லலிதாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்ததன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் காதலித்து வந்ததாகவும், இது குறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.