இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழப் பெண்!!

462

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த முதலாவது இலங்கை பெண் என்ற பெருமையை தமிழ்நாடு – திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி பெற்றுள்ளார்.

நளினிக்கு முதன்முறையாக வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அன்னை ஆசிரமம் எம்எம் நடுநிலைப்பள்ளியில் அவர் தனது முதல் வாக்கினைச் செலுத்தியுள்ளார்.

வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள நளினி, இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை, மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள்.

அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் காணப்படுகின்றனர். எங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விட, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் நளினி இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.