உயிரிழந்த மகனின் மரணச் சடங்கை செய்ய முடியாத நிலையில் தவிக்கும் தாய் : முல்லைத்தீவில் சோகம்!!

2071

புதுக்குடியிருப்பு – தேராவில் குளம் நிரம்பி மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள வீடுகள் சுமார் நான்கு மாதங்களாக வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த தாயொருவர் உயிரிழந்த தனது மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாது தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக தேராவில் குளத்தின் மேலதிக நீரால் அப்பகுதி வீடுகள் நிரம்பியிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையினை அடுத்து இந்த நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட அரசாங்க அதிபர் முன்னெடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 17.02.2024 அன்று குறித்த நீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக ஞானம் பவுண்டேசன் நிறுவனம் முன்வந்திருந்தது.

இருந்தும் குறித்த நிதியை கொண்டு வேலையை நிறைவு செய்ய வனவள திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களால் விதிக்கப்பட்ட தடை காரணமாக இதுவரை குறித்த வேலைத்திட்டம் பூர்த்தியாக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த பகுதியில் இருந்த வீட்டின் உரிமையாளரது மகன் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிக்கிரியைகளை அவரது வீட்டில் வைத்தே செய்வதற்கு கூட முடியாத நிலையில் அந்த தாய் இருப்பதோடு, இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளின் அசமந்த போக்கு குறித்து கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.