
ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும் வகையிலான எந்தவொரு தகவலையும் வெளியிடாமையினால் தமது முயற்சி வெற்றிபெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவிக்கின்றார்.
153 புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தம்மால் கூற முடியாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
தமது பொறுப்பில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் மீண்டும் திருப்பி அனுப்பும் நோக்கம் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு இல்லை என அந்த நாட்டு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த விவகாரம் அந்த நாட்டின் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 37 சிறுவர்கள் உள்ளிட்ட 153 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆழ்கடலில் உள்ள அவுஸ்திரேலியாவின் சுங்க படகொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டதாக அந்த ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாட்டிலிருந்து சட்டவிரோமாக புகலிடம் கோரி வேறு நாடுகளுக்கு மக்கள் செல்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரெரா கூறியுள்ளார்.
இலங்கை தற்போது அபிவிருத்தி அடைந்துள்ளது. இலங்கையில் வாழமுடியும் என்பதனை அவுஸ்திரேலிய பிரதமர் கூட அண்மையில் கூறியிருந்தார். அதன் காரணமாகவே அங்கு சென்ற 41 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதனை அவர்கள் கூறியுயள்ளனர். எனவே நாட்டின் தற்போதைய நிலைமையை பலரும் அறிந்துள்ளனர். ஆகவே புகலிடம் கோரி வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை கடற்படைத் தளபதி மேலும் தெரிவித்தார்.





