வெளிநாட்டில் மனைவி : மகளை துன்புறுத்தி காணொளி வெளியிட்ட தந்தை கைது!!

908

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை மீண்டும் நாட்டிற்கு வருமாறு தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்ட தந்தையை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தனது மகளைக் கவனிக்கும் பொறுப்பை, கணவன் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு தாய் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மனைவியை மீண்டும் நாட்டிற்கு வருமாறு அழைத்து தனது பெண் குழந்தையை துன்புறுத்தி காணொளி வெளியிட்டுள்ளார்.

விளக்கமறியல் உத்தரவு

தற்போது பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை குணமடைந்த பின்னர் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், தாயார் வரும் வரை சிறுமி காப்பகத்தில் வைக்கப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.