யாழில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்.. கணவன் வெளிநாட்டில்.. மகன் மாயம்!!

590

யாழ் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதுடன், வீட்டின் சுவர்களில் இரத்தக் கறைகளும் காணப்படுகின்றன.

உயிரிழந்த பெண் தனது இரு பிள்ளைகளுடன் தெல்லிப்பழையில் வசித்து வந்ததாகவும், கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (3) அருகிலுள்ள வீட்டில் தூங்கச் சென்றவேளை வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.

அயல் வீட்டில் தூங்கச் சென்ற மகள் மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அதேவேளை, தனது சகோதரன் வீட்டில் இல்லாததையும் அறிந்துள்ளார்.

இது குறித்து அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அயல் வீட்டார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் காணாமல்போன சிறுவனை தேடும் நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.