இன்றும் பலத்த காற்றுடன் மழை : கடல் கொந்தளிப்பால் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

257

தென்மேல் பருவப்பெயர்ச்சியின் நிலைமை காரணமாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 ‐ 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 கிலோமீற்றர் ஆக அதிகரித்தும் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனபடியினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படுவதனால் இக் கடல் பிராந்தியங்களில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கல்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.