விழுந்து நொறுங்கிய விமானத்தில் இலங்கையர்கள் எவரும் இல்லை!!

272

Malaysian

உக்ரைனில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்தவர்களில் இலங்கையர்கள் எவரது பாஸ்போட்களும் இனங்காணப்படவில்லை என நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ரஷியா அருகே கிழக்கு உக்ரைனில் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.

அந்த விமானம், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் ஆகும். நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அந்த விமானம் புறப்பட்டது. அதில், 280 பயணிகளும், 15 சிப்பந்திகளும் இருந்தனர்.

அந்த விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ராடார் கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சற்று நேரத்தில், விமானம் தீப்பிடித்தபடி, வானத்தில் இருந்து நெருப்புக் கோளமாக தரையில் விழுந்தது.

விமானம் விழுந்த இடம், கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் உள்ளது. அந்த பகுதி, கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் இராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வரும் பகுதி ஆகும். மேலும், அப்பகுதி ரஷியாவுக்கு அருகே உள்ளது. ரஷிய எல்லைக்குள் நுழைவதற்கு 40 கி.மீ. தூரத்துக்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது.

அந்த விமானத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் நாட்டு உள்துறை அமைச்சக ஆலோசகர் ஆன்டன் கெராஷ்செங்கோ தெரிவித்தார். தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை உதவியால், விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார்.

மேலும் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஏவுகணையால் தாக்கப்பட்டபோது, விமானம் 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

கடந்த சில வாரங்களில் எத்தனையோ உக்ரைன் விமானங்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர். நேற்று முன்தினம் கூட ஒரு ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது.

இதற்கிடையே, விமானம் விழுந்த இடத்துக்கு அவசரகால மீட்பு குழுவினர் விரைந்தனர். விமானத்தை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். விமானத்தின் சேத பகுதிகளை உள்ளூர் மக்கள் பார்த்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி உக்ரைன் பிரதமர் எரிசெனி யட்செனிக் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த மார்ச் 8ம் திகதி, மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த 239 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. அந்த விமானம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தநிலையில் மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், இவ்வாறு ஒரு விபத்தைச் சந்தித்துள்ளது.