வவுனியாவைச் சேர்ந்த பெண் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி!!

1036

வவுனியா பிரதேசத்தில் பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


வவுனியா – போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 10 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, கம்பஹா பிரதேசவாசி ஒருவர் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.


சந்தேக நபர் குறித்து பணியகத்துக்கு 5 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், விசாரணை அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று கைது செய்துள்ளனர்.

மேலும், முறைப்பாடுகளின் அடிப்படையில், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​அவர் நாட்டில் உள்ள ஒரு பிரபலமான காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றமை தெரியவந்துள்ளதாக பணியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.