தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் வெற்றியை நோக்கி இலங்கை அணி!!

447

D

இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா 455 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை மூன்றாவது நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்த நிலையில் நான்காவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 292 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதையடுத்து 163 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 206 ஓட்டங்களை சேர்த்து அதிரடியாக ஆட்டத்தை இடை நிறுத்தியது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 51 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 37 ரன்களும், குயின்டான் டி கொக் 36 ரன்களும், அம்லா 22 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 370 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடின இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை இலங்கை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் தரங்கவை (14 ரன்), ஸ்டெயின் விரைவில் ஆட்டமிழக்க செய்தார். இருப்பினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கௌஷல் சில்வாவும், சங்கக்காரவும் சரிவை தடுத்ததுடன், அணி நல்ல நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 32 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. சில்வா 37 ரன்களுடனும், சங்கக்கரா 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கையின் வெற்றிக்கு இன்னும் 260 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் இருப்பதால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

அதே நேரத்தில் கடைசி நாளான இன்று உணவு இடைவேளைக்குள் சில விக்கெட்டுகளை தென்னாபிரிக்கா வீழ்த்தி விட்டால் அதன் பிறகு அவர்களது கை ஓங்கி விடும். போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்திருப்பது, ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.