சென்னை புறநகர் தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே ஜிஎஸ்டி சாலையில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் மஞ்சுளா. இருவரும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு மஞ்சுளாவுக்கும், அவரது மாமியார் சித்ராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் மணிமங்கலம் பகுதியில் கணவருடன் மஞ்சுளா தனியாக சென்றுள்ளார்.
இந்நிலையில் மஞ்சுளாவுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட 12 சவரன் தங்க நகைகளை மஞ்சுளாவின் மாமியார் சித்ரா வாங்கி மகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. நகையை பலமுறை கேட்டும் மாமியார் தராததால் மணிமங்கலம் காவல்நிலையத்தில் மாமியார் மீது மஞ்சுளா புகார் அளித்தார்.
மேலும் நகையை ஜூன் 15ம் தேதி தருவதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் சித்ரா கடிதம் எழுதியுள்ளார்.இந்நிலையில் மஞ்சுளா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சுளா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், இது கொலை என்றும், மஞ்சுளாவின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் மணிமங்கலம் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், ஆர்டிஓ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது,
அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.