வாகனத்தின் டயரில் காற்றை பிடுங்கிய பொலிஸ்காரருக்கு நேர்ந்த கதி!

1806

இலங்கையின் வத்தளைப் பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் வாகனத்தின் டயரில் காற்றை விட்ட பொலிசுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

பல டன் கனரக பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன் லாரியின் சக்கரங்களில் காற்றை வெளியேற்றும் போக்குவரத்து சார்ஜன்டிடம் அங்கிருந்த மக்கள் இது ஒரு குற்றச்செயல் என்றும் அதைச் செய்ய வேண்டாம் என்றும் கூறினர்.

சரிவான நிலத்தில் லீவர் மூலம் வாகனத்தை உயர்த்தி டயரை மாற்றுவது கடினம் என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டபோதும், அவர் அதனை செவி மடுக்கவில்லை.

கனரக வாகனத்தின் ஓட்டுநர் வரும் வரை இதைச் செய்ய வேண்டாம் என பொதுமக்கள் கோரியபோதும், காதில் வாங்காமல் அவர் வாகனத்தின் காற்றை பிடுங்கி விட்டார்.

வீதியின் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தமையினால் இவ்வாறு காற்று விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்து ஓட்டுநருக்கு அபராதச் சீட்டும் எழுதுகிறார். இது குறித்த காணொளி சமூகவைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதேவேளை இந்த வாகனத்தின் காற்றை பிடுங்கிய வத்தளை போலீஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் சார்ஜன்ட் விக்ரமசிங்க என கூறப்படுகின்றது.