அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துள்ளார். இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55 ஆயிரமாக அதிகரிக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று ஜனாதிபதிக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்கள் அன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் செல்ல முடியாமல் அஞ்சி ஓடினர்.
அப்படியிருந்த நாட்டில் சுதந்திரமாக ஜனாதிபதி தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்கியிருக்கிறோம். எதிர்கட்சியினர் மக்களிடத்தில் வெறுப்பை தூண்டுவதை மட்டுமே செய்தனர்.
இரண்டு வருடங்கள் நாட்டு மாணவர்களின் கல்வி வாழ்க்கை கேள்விக்குறியானது.
மே மாதத்தில் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்து அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதனால் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55 ஆயிரமாக அதிகரிக்கும்.
எனவே நாடு மீண்டும் நெருக்கடிக்குள் விழுந்து பூச்சியமாவதை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே நாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.