வீதியில் கிடந்த ATM அட்டையினால் மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

5029

ஹட்டனில் வீதியில் கிடந்த ATM அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன், கண்டியிலுள்ள கடைகளில் தொலைபேசி பாகங்கள், உடற்கட்டு ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் சில ஜோடி காலணிகளை வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன ATM அட்டையின் உரிமையாளரான பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஹட்டன் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சந்தேக நபரான மாணவர் பொருட்களை கொள்வனவு செய்த நிறுவனம் ஒன்றில் வழங்கப்பட்ட அவரது உண்மையான பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் நேற்று மாணவனை கைது செய்துள்ளனர்.

இதன்போது, ​​கைதான மாணவன் கொள்வனவு செய்த பொருட்களை பேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 13ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவன் நேற்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 05 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வழக்கை எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.