தமிழகத்தில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜ் . 38 வயதான இவருடைய மனைவி சங்கீதா.
இவர்களுக்கு 8 வயதில் ரோஹித் , 4 வயதில் தர்ஷினி என 2 குழந்தைகள். கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று இரவு கோவிந்தராஜ் வீட்டில் இல்லாத சமயத்தில், அவரது மனைவி சங்கீதாவும், குழந்தைகளும் சடலமாக கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த உதவி கமிஷனர் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்து, சங்கீதா அவரது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தலைமைக் காவலர் கோவிந்தராஜும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை காப்பாறிய காவல்துறையினர் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.