மின்னல் தாக்கி தங்கை உயிரிழப்பு : சகோதரன் மருத்துவமனையில்!!

1337

பசறை அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி தங்கை உயிரிழந்துள்ளதுடன் அண்ணன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று நேற்று (31.10.2024) இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தங்கையும் 17 வயதுடைய அண்ணனும் வீட்டுக்கு முன்பாக மண்வெட்டியுடன் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

பிள்ளைகளின் சத்தத்தை கேட்ட பெற்றோர் வெளியில் வந்து பார்த்த போது தனது இரு பிள்ளைகள் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்து கூக்குரல் இட்டு உதவியை நாடி உள்ளனர்.

சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அயலவர்கள் இரு பிள்ளைகளையும் பசறை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, தங்கை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயங்களுக்குள்ளான 17 வயதுடைய அண்ணன் பசறை வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.