பதுளை விபத்தில் படுகாயமடைந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு!!

578

பதுளைக்கு (Badulla) களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்ட தனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ். இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்ததோடு, பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எனினும், இன்று அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வடைந்துள்ளது.