ஹெல்மெட் மாற்றிக் கொண்டு திருமணம் : பின்னணியில் இருக்கும் தந்தையின் பாசம்!!

191

திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை மணமக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இந்திய மாநிலமான சத்தீஸ்கர், ராஜ்நந்தகன் பகுதியில் கடந்த 24 -ம் திகதி நடைபெற்ற திருமணம் தற்போது வைரலாகியுள்ளது.

திருமணத்தின் போது, மணமகன் பிரேந்திரன் மற்றும் மணமகள் ஜோதி சாஹு ஆகிய இருவரும் முதலில் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். பின்னர், மாலைக்கு பதிலாக இருவரும் ஹெல்மெட்டை மாற்றி கொண்டனர்.

இதையடுத்து, திருமணத்திற்கு வந்த இளைஞர்களிடம், விபத்தைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் பழக்கத்தை கடைபிடியுங்கள் என்று மணமகன் பிரேந்திரன் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து மணமகன் பேசுகையில், “என்னுடைய தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

என் தந்தையின் உயிரிழப்பு என் வாழ்க்கையில் மிகவும் ஆழமாக பாதித்தது. இதனால் இருச்சக்கர வானம் ஓட்டுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் இந்த விழுப்புணர்வை மேற்கொண்டேன்” என்றார்.