வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

1159

இலங்கையை அண்டிய கடற்பரப்புகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமையினால் குறித்த பகுதியில் கடற்றொழில் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு குறித்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை இலங்கை மற்றும் தமிழகத்தை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் காற்றானது 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிலிருந்து மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமையும் படிப்படியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என கூறப்பட்டுள்ளது.