வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 20ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று (26.12.2024) இடம்பெற்றது.
பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவுத்தூபியானது சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையின் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது. தற்போது நகரசபையால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.
நரசிங்கர் ஆலயத்தின் உப தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், முத்து முகமது மற்றும் இந்து, பௌத்த மதகுருமார்கள்,பொதுஅமைப்புகள், கிராமமக்கள், சமூகஆர்வலர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.