
வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஊடகவியலாளரான நவரத்தினம் கபிலநாத்துக்கு இரவு இரு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இதன் போது குறித்த ஊடகவியலாளர் தான் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்வதாக தெரிவித்த போது, தம்மை யார் என தெரியாது பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு இருப்பதற்கு விருப்பமில்லையா என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஊடகவியலாளர் வவுனியாவை சேர்ந்த ஏனைய இரு ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இவ் ஊடகவியலாளர் ஓமந்தை பிரதேசத்தில் யாழ் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டடிருந்த சமயம் ஏனைய ஊடகவியலாளர்களுடன் இணைந்து ஊடகவியலாளாகளுக்காக குரல் கொடுத்திருந்ததுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





