கத்தி பட சர்ச்சை : தமிழ் அமைப்பினருடன் படக்குழுவினர் சமரசப் பேச்சு!!

471

Kathi

விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வந்த துப்பாக்கி படம் வெற்றி கரமாக ஓடியதால் இந்த படத்துக்கு பலத்த எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் பாடல் வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்த நிலையில் கத்தி படத்துக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு நெருக்கமானவர் இந்த படத்தை தயாரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை படக்குழுவினர் ஏற்கனவே மறுத்தனர். தயாரிப்பாளர் ஈழத்தில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழர். வெளிநாட்டில் வசிக்கிறார் என்று விளக்கம் அளித்தனர். கத்தி படத்தின் தயாரிப்பாளர் தான் ஏற்கனவே வேறு பெயரில் சேரனை வைத்து கரு.பழனியப்பன் இயக்கிய பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இப்பிரச்சினையில் சமரச முயற்சியாக தமிழ் அமைப்பினரை கத்திப் படக்குழுவினர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனை ஏ.ஆர்.முருகதாஸ் உறுதி செய்தார். அவர் கூறியதாவது..

கத்தி படத்துக்கும் ராஜபக்சவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நானும் கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாகரனும் பழநெடுமாறன், சீமான், திருமாவளவன் போன்றோரை சந்தித்தோம். படத்தின் மீது எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தோம். விரைவில் வைகோவையும் சந்தித்து பேச இருக்கிறோம் என்று அவர் கூறினார்.