
தமிழில் இயற்கை உள்பட பல்வேறு படங்களிலும், ஏராளமான கன்னட படங்களிலும் நடித்து இருப்பவர் குட்டி ராதிகா. இவர் கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
இதற்கிடையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும், குட்டி ராதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் திருமணத்தில் முடிந்தது. குமாரசாமி, குட்டி ராதிகாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் பல பிரச்சினைக்கு இடையே நடந்ததால் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இவர்களுக்கு சாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், குமாரசாமிக்கும், குட்டி ராதிகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து விட்டதாக செய்தி பரவியது. மீண்டும் படத்தயாரிப்பிலும், நடிப்பிலும் குட்டி ராதிகா ஈடுபடுவதை விரும்பாத குமாரசாமி, அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியானது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு குட்டி ராதிகா பேட்டி அளிக்கையில், எனது கணவரும், நானும் பிரிந்து விட்டோமா இதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கிறோம். எங்களுக்குள் பிரச்சினை இருப்பதாக தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள் என்றார்.





