அமெரிக்கா – லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ!!

285

அமெரிக்கா(USA)-லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக குறைந்தது 10 பேர் இறந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் மாநில மருத்துவ பரிசோதகர் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில், இந்த காட்டுத்தீயானது வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7ஆம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுதீயானது இன்றுவரை கொழுந்துவிட்டு எரிகின்றது.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் காட்டுத்தீ வேகமாக பரவியுள்ளது. காற்றின்வேகம் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ குறையாமல் அதிகரித்து வருகின்றது.

இதில் பாடசாலைகள், ஹாலிவுட் நடிகர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த காட்டுத்தீயில் 16 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி இதுவரை எரிந்து நாசமாகியுள்ளது. கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் அந்த பகுதி முழுவதும் எரிமலை வெடித்ததை போன்று காட்சியளிக்கிறது.

எனவே அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியா மாகாண அரசாங்கம் அங்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளதுடன்,

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மற்றொருபுறம் உலங்குவானூர்திகள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அண்டை மாகாணங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் தனது இத்தாலி பயணத்தை இரத்து செய்து உள்ளார். லொஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா காட்டுதீ மிக பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சுமார் 4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.