ஓமானில் இலங்கைப் பெண்ணுக்கு நடந்த கொடூரம் : நேரடியாக வெளியிட்ட உண்மைகள்!!

475

கடந்த 2022ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு – முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண் வீடுதிரும்பியுள்ளார்.

இராசலிங்கம் யசோமலர் என்னும் குறித்த பெண், கடந்த ஒரு வருடமாக எதுவித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை உரியமுறையில் மீட்டுத்தருமாறு அவரது குடும்பத்தினர் கடந்த 19.12.2024 அன்று ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த பெண் கடந்த 11ஆம் திகதி திடீரென தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாக அப்பெண்ணின் சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் கோரிக்கை

இவ்விடயம் தொடர்பில் அப்பெண்ணின் குடும்பத்தினர் நேற்று முன்தினம்(16.01.2025) மாலை தமது வீட்டில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வீடு திரும்பிய பெண் பேசுகையில், தான் வெளிநாடு சென்று 2 வருடங்கள் ஆகின்றன. அதில் ஒருவருட காலத்திற்கான சம்பளத்தை நான் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் எமது குடும்பத்திற்கு அனுப்பியிருந்தார்.

மற்றைய வருடத்திற்குரிய சம்பளம் எதனையும் அவர்கள் எமது வீட்டிற்கு அனுப்பவில்லை, என்னை அடித்து துன்புறுத்தினார்கள்.

மொட்டைமாடியில் வெயிலில் முழங்காலில் நிற்குமாறு பணித்தார்கள், கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள் இவ்வாறு பல கொடுமைகளை நான் அங்கு அனுபவித்தேன்.

எனவே, நான் வேலை செய்தமைக்கு மிகுதியாகவுள்ள ஒரு வருடத்திற்குரிய சம்பளத்தை எனக்கு பெற்றுத்தர வேண்டும். என்னை மீட்டெடுப்பதற்கு உதவிய ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.